வடமாகாணத்தின் நுழைவாயிலாக கருதப்படும் வவுனியாவில் ஏற்பட்ட கொரோனாத் கொத்தணியில் நேற்றைய ஒரே நாளில் 52 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் ஏற்பட்ட தொற்றுப் பரம்பலானது வவுனியா கொத்தணியை ஏற்படுத்தியுள்ளதுடன் வடக்கின் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
வவுனியா நகரப்பகுதியானது வட மாகாணத்தின் ஏனைய பகுதிகளுக்கான வர்த்தக கேந்திர நிலையமாக செயற்பட்டு வருகின்றது.
அங்குள்ள மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் முகவர் நிலையங்களில் இருந்தே வடக்கின் ஏனைய மாவட்டங்களுக்கான வர்த்தக பரிவர்த்தனை பெரும்பாலும் இடம்பெற்று வருகின்றது.அந்தவகையில் வவுனியா நகர வர்த்தக சமூத்தில் ஏற்பட்டுள்ள கொத்தணிப் பரம்பலானது வடக்கில் மிகப் பெரும் கொரோனா பரம்பலை ஏற்படுத்திவிடும் அபாயம் இருப'பதை வடமாகாண சுகாதாரத் தரப்பினர் அச்சத்துடன் எதிர்நோக்கியுள்ளனர்.
வவுனியா நகர வர்த்தகர்களிடம் முதல் கட்டமாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 54 வர்த்தகர்களுக்கு கொரோத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் மேலும் 49 வர்த்தகர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து வவுனியா நகர வர்த்தகர்களில் இதுவரை 103 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தொற்று உறுதியான வர்த்தகர்களுடன் தொடர்புபட்டு மேலும் இக் கொத்தணி பரம்பலானது விரிவடையும் அபாயமுள்ளது.
அவ்வாறு வவுனியா கொத்தணி விரிவாக்கம் பெறும் போது அது வடக்கின் பல பகுதிகளில் உப கொத்தணிகளை உருவாக்கும் நிலை காணப்படுவதாகவும் வடமாகாண சுகாதார தரப்பினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
மருதனார்மடம் சந்தைக் கொத்தணி ஆரம்பத்தில் இருந்து வேகம் சற்று தணிந்து தற்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலை ஆறுதலை ஏற்படுத்தியிருந்தாலும் எதிர்வரும் நாட்கள் அப்படியே கடந்துவிடும் என்பதற்கு எதுவித உத்தரவாதமும் இல்லாத நிலையே காணப்படுகின்றது.
புதுக்குடியிருப்பு மற்றும் மன்னாரில் ஏற்கனவே உப கொத்தணிகள் உருவாகியுள்ள நிலையில் அதன் தாக்கமும் எதிர்வரும் நாட்களில் பெரும் அச்சுறுத்தலாக மாற்றமடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போதைய வவுனியா கொத்தணிப் பரம்பலானது மிக வேகமான அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளமை வடக்கு மாகாணம் சந்திக்கப்போகும் கொரோனா அச்சுறுத்தலின் முன்னறிவிப்பாகவே சுகாதாரத் தரப்பினரால் அவதானிக்கப்பட்டுள்ளது.
இந்த பின்னணியில் வடக்கு மாகாணம் கொழும்பு, கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்டு பெருந் தொற்றாக மாறியுள்ள நிலைக்கு செல்லாது இருக்க வேண்டுமாயின் பொதுமக்களின் கைகளில் தான் அது தங்கியுள்ளது.
இயலுமான வரை அநாவசிய பயனங்களையும், ஒன்று கூடல்களையும் தவிர்த்து வெளி நடமாட்டங்களின் போது சுகாதார-பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிப்பதன் மூலமே இவ் அபாய நிலையில் இருந்து வட மாகாணத்தை தற்காத்துக் கொள்ள முடியும்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், வவுனியா